காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி கொலை : உறவினர்கள் விடிய விடிய போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் காதல் தொடர்பாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கொல்லப்பட்ட இளைஞரின் உறவினர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அடியமங்கலம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து, அதே கிராமத்தைச் சேர்ந்த மாலினியுடன் கடந்த பத்து ஆண்டுகளாகக் காதலில் இருந்தார். அவர்களது உறவிற்கு மாலினியின் தாய் தரப்பில் கடுமையான எதிர்ப்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தாயின் விரோதத்தை மீறி, மாலினி வைரமுத்துவின் வீட்டிலேயே குடியேறியிருந்தார். இருவருக்கும் சட்டப்பூர்வமாக திருமணம் நடத்த குடும்பத்தினர் முனைந்திருந்த சூழல் காணப்பட்டது.

இந்நிலையில், வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வைரமுத்துவை சிலர் வழிமறித்து அரிவாளால் தாக்கியுள்ளனர். கடுமையான காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வைரமுத்துவின் உறவினர்கள், மாலினி மற்றும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியல் கலைக்கப்பட்டது.

ஆனால், மருத்துவமனையில் உறவினர்கள் தொடர்ந்தும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலினியின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் வரை வைரமுத்துவின் உடலை பெற்றுக்கொள்ளமாட்டோம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கொலைச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version