திருச்செந்தூரில் உலக நுகர்வோர் தின விழா போக்குவரத்து போலீசாருக்கு விருது

உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவில், சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்குப் பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டதுடன், பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்செந்தூர் போக்குவரத்து காவல்துறை அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் உலக நுகர்வோர் தின விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றது. பேரவையின் நிறுவனத் தலைவர் சிவ ஏ.வி.பி. மோகனசுந்தரம் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். விழாவில், திருச்செந்தூர் வரும் பக்தர்களுக்குப் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பாதுகாப்புப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் திருச்செந்தூர் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்கள் வேல்முருகன், சதீஷ்குமார், முதல் நிலை காவலர் முத்து செல்வன், இரண்டாம் நிலை காவலர் ரெக்ஸ்டன் மற்றும் போக்குவரத்து காவல்துறை நண்பர்கள் குழுவினருக்கு ‘சிறந்த சேவையாளர்’ விருதுகளை வழங்கி மோகனசுந்தரம் கௌரவித்தார்.

தொடர்ந்து, அரசுத் துறைகளில் நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் நலனுக்காகத் திறம்படச் செயல்பட்டு வரும் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் எஸ். ராஜேஸ்வரி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சின்னச்சாமி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உதவி ஆணையர் மு. நாகவேல் ஆகியோருக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், சமூகப் பங்களிப்பிற்காக அரவிந்த் அசோசியேட்ஸ் மேலாளர் ஏ. ஐயப்பன் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சமாஜ தலைவர் பழனி ஹரிஹர முத்து ஐயர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவின் ஒரு பகுதியாகத் திருச்செந்தூருக்கு வரும் நுகர்வோர் மற்றும் பக்தர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: கட்டண விவரப் பலகை: திருச்செந்தூர் நகரிலுள்ள அனைத்து ஆட்டோ நிறுத்தங்களிலும் பயணக் கட்டண விவரங்களைப் பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக எழுதி வைக்க வேண்டும்.

பக்தர்களிடம் கனிவான நடத்தை: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்குப் பாதயாத்திரையாக வரும் முருகன் மற்றும் ஐயப்ப பக்தர்களிடம் சில ஆட்டோ ஓட்டுநர்கள் கனிவற்ற முறையில் நடந்துகொள்வதும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது. இதனைத் தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பு வேலி அமைத்தல்: திருவிழாக் காலங்களில் சன்னதி தெரு பந்தல் மண்டபப் பகுதியில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, நுகர்வோர் பேரவை சார்பில் சொந்தச் செலவில் நிரந்தரத் தடுப்பு வேலிகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) எம். ரகுபதியை நேரில் சந்தித்து மனு அளிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் திருச்செந்தூர் நகரத் தலைவர் ராஜமாதங்கன் நன்றி கூறினார். விழாவில் நுகர்வோர் பேரவை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Exit mobile version