நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு தாக்கி, நகை மற்றும் பணம் பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேத்துப்பட்டை அருகே இடையன் குளத்தூர் ரோட்டில் வசித்து வந்தவர் கோடீஸ்வரி. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். ஒரே மகன், இரண்டு மகள்கள் ஆகியோர் சென்னையில் வேலை பார்த்து வருவதால், கோடீஸ்வரி தனியாகவே வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன்புறமும் பின்புறமும் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த கோடீஸ்வரியின் வாயை அடைத்து, கைகளும் கால்களும் கட்டி, பணம் மற்றும் நகை கேட்டனர். பதில் அளிக்காததால், இரும்பு ராட்டினால் தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், பீரோவை உடைத்து 10,000 ரூபாய் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த 7 சவரன் நகையை பறித்து சென்றனர். தப்பிச் செல்லும் முன் வீடு முழுவதும் மிளகாய் தூள் வீசியுள்ளனர்.

கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு வெளியே வந்து கூச்சலிட்ட கோடீஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவத்தையடுத்து, சேத்துப்பட்டை போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version