”இல்லாத சரஸ்வதி நதி நாகரிகம்.. 2000 ஆண்டுகால சண்டையில் தோற்க மாட்டோம்” – முக ஸ்டாலின்

தமிழர்களின் தொன்மையான நாகரிக வரலாற்றை மத்திய அரசு திட்டமிட்டு மறைக்க முயற்சிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலியில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், சரஸ்வதி நதி நாகரிகத்தை முன்னிறுத்தி பேசுபவர்கள், தமிழர் வரலாற்று அகழாய்வு உண்மைகள் வெளிவரக் கூடாது என்ற நோக்கில் செயல்படுவதாக விமர்சனம் செய்தார்.

கீழடி, பொருநை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாக கூறிய முதலமைச்சர், அந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு தயங்குகிறது என்றார். “இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தை தேடுவதில் சிலர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இது தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் எதிரான மனநிலையை வெளிப்படுத்துகிறது” என அவர் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களை நேரில் பார்வையிட்டால், தமிழர் நாகரிகத்தின் ஆழமும் தொன்மையும் புரியும் என ஸ்டாலின் கூறினார். “இது இரண்டாயிரம் ஆண்டுகால அடையாளப் போராட்டம்; அதில் நாம் தோற்க மாட்டோம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், கோவையில் நடைபெற்ற ‘சிந்து–சரஸ்வதி நாகரிக மாநாடு’ நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதத்தின் தொன்மையான நாகரிகம் சரஸ்வதி நதிக்கரையோரம் உருவானதாகக் கூறினார். உலகின் பல நாகரிகங்களைப் போலவே, நதிகளின் அழிவுடன் அந்த நாகரிகமும் மறைந்ததாக அவர் விளக்கினார்.

சரஸ்வதி நதி நாகரிகத்தில் அறிவுசார் மரபுகள், வேதங்கள், தத்துவ சிந்தனைகள் உருவானதாகவும், அவை மொழி மற்றும் இன எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும் பரவியுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கருத்துக்கள் தமிழ் சங்க இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

சரஸ்வதி நதி நாகரிகம் குறித்த ஆளுநரின் கருத்துகளுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த விவாதம், தமிழர் நாகரிகத்தின் அடையாளம் மற்றும் வரலாற்று விளக்கங்கள் தொடர்பான அரசியல் – பண்பாட்டு விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Exit mobile version