மின்சாரம் பாய்ச்சி காட்டுப்பன்றி வேட்டை – 2 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மின்சாரம் வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒட்டன்சத்திரம் வனச்சரகம், சத்திரப்பட்டி பிரிவு, கிழக்கு ஆயக்குடி கிராமம் கோம்பைபட்டி பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாட்டம் இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர். வனத்துறையினர் அங்குச் சென்று சோதனை செய்தபோது:

தோட்டத்தைச் சுற்றி மின்சாரக் கம்பிகளைப் படரவிட்டு, அதில் உயர் அழுத்த மின்சாரத்தைப் பாய்ச்சி காட்டுப்பன்றியை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தங்கவேல் மகன் ரவிச்சந்திரன் மற்றும் ரஞ்சித் குமார் மகன் சக்திவேல் (எ) மணிகண்டன் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட காட்டுப்பன்றியின் உடல் பறிமுதல் செய்யப்பட்டது. வனப்பகுதிகளில் அல்லது விளைநிலங்களில் இதுபோன்று மின்சாரம் வைத்து விலங்குகளை வேட்டையாடுவது “வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்” படி கடுமையான குற்றமாகும். இதையடுத்து, பிடிபட்ட இருவர் மீதும் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளைநிலங்களைப் பாதுகாப்பதாகக் கூறி சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பது வனவிலங்குகளுக்கு மட்டுமின்றி, மனித உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version