சம வேலைக்கு சம ஊதியம்” என்ற தங்களது நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றிவிட்டதாகக் கூறி, திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை 800-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டுப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதியத்தில் பெரும் முரண்பாடு நிலவி வருகிறது. ஒரே தகுதியுடன், ஒரே பணியைச் செய்யும் தங்களுக்கு ஊதியத்தில் மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் (வாக்குறுதி எண்: 311), தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று பல ஆண்டுகள் கடந்தும், இதற்கான அரசாணை வெளியிடப்படாததைச் சுட்டிக்காட்டி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் இன்று இந்த அதிரடிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். மாவட்டத் தலைவர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்தக் காத்திருப்புப் போராட்டத்தில் மாநிலப் பொதுக்குழுச் செயலாளர் சேவியர் பால்ராஜ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில், “ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறி வாக்குகளைப் பெற்ற திமுக, தற்போது அந்த வாக்குறுதியை மறந்து மௌனம் காப்பது ஆசிரிய சமூகத்திற்குச் செய்யும் துரோகமாகும். தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு அரசாணை வெளியிட வேண்டும், இல்லையெனில் எங்களது போராட்டம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரமடையும்” என எச்சரித்தார்.
இந்த நிகழ்வில் வட்டாரப் பொறுப்பாளர்கள் ஜூப்லிஷகிலா, லியோ கணேசபெருமாள், முருகேசன், கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இடைநிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதால், திண்டுக்கல் பழனி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பரபரப்பும் நிலவியது. இரவு நேரத்திலும் ஆசிரியர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்ததால், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
