தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட வெப்பத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் பொதுக்கூட்டங்கள் எனத் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. அந்த வகையில், மதுரையின் இதயப்பகுதியான முனிச்சாலை சந்திப்பில் இன்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சார நிகழ்வு நடைபெற்றது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளருமான செல்லூர் கே.ராஜு கலந்துகொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக வகுத்துள்ள கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு வழங்கினார். அந்த நோட்டீஸில் பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித் தொகை, வீடற்ற அனைவருக்கும் ‘அம்மா இல்லம்’, ஆண்கள் மற்றும் பெண்களுக்குக் கட்டணமில்லா இலவசப் பேருந்து பயணம், வேலை உறுதித் திட்டத்தில் 150 நாட்கள் வேலை, மற்றும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 25,000 ரூபாய் மானியம் உள்ளிட்ட அதிரடி வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வின் போது செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றிய செல்லூர் கே.ராஜு, திமுக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். “விடியல் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்குக் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் மட்டுமே மிச்சம் வைத்துள்ளது. வரி மேல் வரி விதித்து மக்களின் வாங்கும் சக்தியை இந்த அரசு முற்றிலுமாகப் பறித்துவிட்டது. விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மின் கட்டண உயர்வால் மக்கள் கோடை காலத்திலும் கூட ஃபேனைப் போடத் தயங்கும் அவலநிலையை இந்த விடியல் அரசு ஏற்படுத்தியுள்ளது” என அவர் சாடினார். மேலும், “அதிமுக எப்போதுமே சொல்வதைத்தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லும்; ஆனால், இந்த முறை அதிமுக சொல்லாத நன்மைகளையும் மக்களுக்குச் செய்யும்” எனப் புதிய முழக்கத்தை முன்வைத்தார்.
திமுகவின் ஊழல் மற்றும் மதுக்கொள்கை குறித்துப் பேசிய அவர், “அலைகாற்றில் (2G) கருணாநிதி காலத்தில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்யப்பட்டது போல, தற்போதைய ஆட்சியிலும் புதிது புதிதாக ஊழல்கள் அரங்கேறி வருகின்றன. மதுக்கடைகளை மூடுவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் அரசு, இன்று டாஸ்மாக் கடைகளை அதிகரித்துத் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. ஒரு சொட்டு மதுகூட இருக்காது என மேடைக்கு மேடை முழங்கிய கனிமொழியின் வாக்குறுதி என்னவானது? இன்று தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் அளவிற்குப் போதை கலாச்சாரம் பெருகியுள்ளது” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இறுதியாக, அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், திமுகவின் இந்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வரப்படவில்லை எனத் தனது உரையில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டார்.

















