தூத்துக்குடி : “கூட்டணிகளால் பலன் இல்லை; மக்களை நம்பி, தனித்து தான் நாம்போல் கட்சி போட்டியிடும்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய சீமான், அரசியல், சமூகவியல் மற்றும் மதம் தொடர்பான பல்வேறு விவகாரங்களில் தனது கருத்துகளை பகிர்ந்தார். “பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பவர்களாக உள்ளனர்,” என்ற அவர், “தமிழ் என்பதையும் முருகன் என்பதையும் பிரிக்க முடியாது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கம் வெறும் உளறல் மட்டுமே ஆகி விட்டது” என்றார்.
தொடர்ந்து, “நாம் தமிழர்கள் கோவில்கள் கட்டியவர்கள். ஆனால் எங்கள் தாய் மொழியில் ‘குடமுழுக்கு’ என்பது கூட இல்லை. இது எத்தனை பெரிய அவமதிப்பு?” எனக் கேள்வி எழுப்பினார். “சைவம் மற்றும் தமிழ் ஒன்றிணைந்தவை. தமிழ் அழிந்தால், தமிழ் இனம் அழிந்து விடும்,” என அவர் வலியுறுத்தினார்.
தி.மு.க. அரசின் நான்கு ஆண்டு ஆட்சியை விமர்சித்த சீமான், “மின் கட்டணம், சொத்து வரி குறையவில்லை. கேளிக்கை வரி நான்கு சதவீதம் குறைத்ததால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை” என கூறினார்.
“அமைச்சர் ஒருவர் அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு பிரதமர் மோடியை சந்திக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி வழங்கியவர் யார்?” என்ற கேள்வியும் எழுப்பினார்.
தனித்து போட்டியிடுவோம் – சீமான் உறுதி
“எனது ஒரே நோக்கம் – இந்த நாட்டின் அரசியல் முறையை முழுமையாக மாற்றுவது. கூட்டணியில் நம்பிக்கை இல்லை. மக்கள் துணைநிற்பார்கள். எனவே தனித்துப் போட்டியிடுவோம்,” என உறுதியுடன் தெரிவித்தார்.
“தடை என்றால் அதை உடை !” – பனையேறும் போராட்டம் குறித்து கண்டனம்
நாளை திருச்செந்தூர் அருகே நடைபெறவுள்ள பனையேறும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததைக் குறித்து, “தடை என்றால் அதை உடை! அஞ்சுவதும், அடிபணிவதும் எங்களிடம் கிடையாது. பாளையரின் வழி தான் எங்களது வழி. பனையேறும் போது வெறும் கையோடு இருக்க மாட்டேன், பாளை அரிவாளுடன் இருப்பேன்,” என சவாலாகக் கூறினார்.
கள் சார்ந்த தடை விதிப்புகளையும் விமர்சித்த அவர், “இந்தியாவின் பல மாநிலங்களில் இயற்கை நயமான கள் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் தடையா இருக்கிறது ? கள் என்பது இயற்கையின் கொடை, அது மது அல்ல. ஆனால் தமிழகத்தில் மட்டும் சாராயத்தைத் தயாரிப்பதும், விற்பதும் ஒரே ஆளாக இருக்கின்றனர்” என்றார்.