மேட்டூர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம், ஜூன் 12: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மொத்தம் 120 அடியாக உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம், தற்போது பரவலாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 92வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்படும் நிகழ்வில், முதற்கட்டமாக அணையில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பிற்பாடு இது 12,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 8 மதகுகள் வழியாக தண்ணீர் ஆர்பரித்து வெளியேறும் நிலையில், இந்த தண்ணீரால் 12 டெல்டா மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை, சம்பா, தாளடி போன்ற முக்கிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட உள்ளன. இதன் மூலம், விவசாய உற்பத்தி பெரிதும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீர் திறப்புக்கு முன்னதாக, மேட்டூர் அணையின் மதகுகள் சீரமைக்கப்பட்டதுடன், சாலையோரங்களில் வளர்ந்திருந்த புல்கள் பொக்லைன் உதவியுடன் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகள் தண்ணீர் வெளியேற்றம் சிறப்பாக நடைபெற வழிவகுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version