திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கோட்டூர் தேவி நாயக்கன்பட்டி கிராமத்தில், விவசாயம் செழிக்க வேண்டியும், ஊர் நலம் பெற வேண்டியும் நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தைப்பூச நன்னாளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ‘நிலா பெண்’ வழிபாட்டுத் திருவிழா இந்த ஆண்டும் பக்திப் பெருக்குடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, இந்த வழிபாட்டிற்கான நிலா பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் முறை மிகவும் கடினமானதாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஊரில் உள்ள சிறுமிகளில் யார் ஒருவர் எட்டு நாள் வழிபாட்டின் போது இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கிறாரோ, அவரே நிலா பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜெய ராமச்சந்திர மூர்த்தி – மகாலட்சுமி தம்பதியினரின் 13 வயது மகள் ஜியா ஸ்ரீ, எட்டு நாட்களும் உறக்கமின்றி விரதமிருந்து நிலா பெண்ணாகத் தேர்வு செய்யப்பட்டாள்.
தேர்வு செய்யப்பட்ட சிறுமி ஜியா ஸ்ரீயை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஊர் எல்லையில் அமைந்துள்ள சரளி மலைக்கு மேளதாளங்களுடன் அழைத்துச் சென்றனர். அங்கு மலைப்பகுதிகளில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் நிற ஆவாரம் பூக்களைக் கொண்டு நிலா பெண்ணிற்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர், ஆவாரம் பூக்கள் நிரம்பிய கூடையைத் தலையில் சுமந்தபடி சிறுமியை ஊர்வலமாக ஊருக்குள் அழைத்து வந்த மக்கள், மாரியம்மன் கோவிலுக்குச் சென்று அங்குத் தனது தோழிகளுடன் சிறுமியை அமர வைத்தனர். நிலா பெண்ணைச் சுற்றி அமர்ந்த கிராமத்துப் பெண்கள், கும்மியடித்தும் பாரம்பரியப் பாடல்களைப் பாடியும் விடிய விடிய வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சிறுமியை மாசடச்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்குச் சிறுமியின் முறை மாமன்கள் ஒன்று சேர்ந்து, முறைப்படி பச்சை தென்னை மட்டைகளால் அழகிய குடிசை அமைத்து, அதில் நிலா பெண்ணை அமர வைத்துப் பாரம்பரியச் சடங்குகளைச் செய்தனர்.
சடங்குகள் முடிந்த பின்னர், கிராமப் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து நிலா பெண்ணிற்குச் சீர் வரிசைகளை வழங்கி கௌரவித்தனர். விழாவின் இறுதி நிகழ்வாக, ஊர் எல்லையில் உள்ள கிணற்றுக்கு நிலா பெண்ணை அழைத்துச் சென்று, அவர் கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களைக் கிணற்றுத் தண்ணீரில் கொட்டினர். பின்னர், ஒரு மண் கலயத்தில் விளக்கேற்றி அதனைத் தண்ணீரில் மிதக்க விட்டு வழிபாடு நடத்தினர். இவ்வாறு தண்ணீரில் விடப்படும் அந்தத் தீப விளக்கு, ஏழு நாட்கள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. காலங்கள் மாறினாலும், தங்களது முன்னோர்கள் கடைப்பிடித்த இந்த வினோத வழிபாட்டு முறையைச் சிதைக்காமல் தற்போதைய தலைமுறையினரும் முன்னின்று நடத்துவது, தேவி நாயக்கன்பட்டி கிராமத்தின் ஒற்றுமையையும் பண்பாட்டையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
















