210 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் எடப்பாடியார் ஆட்சி! ஆர்.பி. உதயகுமார் தேர்தல் ‘சபதம்’!

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியக் கழகத்தின் சார்பில், பூத் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த முக்கிய அமர்விற்கு முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கி, எதிர்வரும் தேர்தல் களம் குறித்து அதிரடி உரை நிகழ்த்தினார். அதிமுகவின் தேர்தல் வியூகங்கள் மிகத் துல்லியமாக வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான பொற்கால ஆட்சியை மீண்டும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.

தனது உரையில் ஆர்.பி. உதயகுமார், பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட பரப்புரைகள் மூலம் அதிமுகவின் தேர்தல் களம் ஏற்கனவே சூடுபிடித்துள்ளதாகக் கூறினார். பூத் முகவர்கள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் ஒவ்வொரு நாளும் மக்களை நேரில் சந்தித்து, அதிமுகவின் ‘ஐந்து முத்தான திட்டங்களை’ விளக்கி 80 சதவீத வாக்குகளைப் பெற இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். “அதிமுகவின் கூட்டணி வலிமையைக் கண்டு திமுக நடுநடுங்கிப் போயுள்ளது. எட்டு கோடி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக எடப்பாடியார் திகழ்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளையும் வெல்வது லட்சியம்; அதில் 210 தொகுதிகளில் வெல்வது நிச்சயம்” என்ற முழக்கத்துடன் களப்பணியாற்ற அவர் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த எழுச்சிமிகு நிகழ்வில் மாவட்டப் பொறுப்பாளர் அப்துல் சமது, மாவட்டக் கழக நிர்வாகிகள் முருகன், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வம், வழக்கறிஞர் திருப்பதி, உஷா சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். மாநில நிர்வாகிகள் புளியங்குளம் ராமகிருஷ்ணன், வெற்றிவேல் மற்றும் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் கண்ணன், பிரபு சங்கர், ராமசாமி, உலகாணி அன்னமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட அணி நிர்வாகிகள் சரவணபாண்டி, சிங்கராஜ்பாண்டியன், பாஸ்கரன், ஆதிராஜா, சிவசக்தி, துரைப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுத் தேர்தல் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள உறுதி பூண்டனர்.

Exit mobile version