திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள்-2025 நிதி வசூலை மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், அவர்கள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சியில், 17 பயனாளிகளுக்கு ₹4.00 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். கடந்த ஆண்டு (2024) திண்டுக்கல் மாவட்டத்தில் கொடிநாள் வசூல் தொகையாக ₹1,55,11,430 வசூல் செய்து வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் வசூலை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கிய நலத்திட்ட உதவிகளின் விவரம்: மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட மகன் அல்லது மகளை இராணுவப் பணிக்கு அனுப்பிய ஒரு பெற்றோருக்குப் போர்ப்பணி ஊக்க மானியத்துடன் வெள்ளிப் பதக்கமும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் திரு. செ. சரவணன் அவர்கள், இராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்: “ஒரு நாடு வளர்ச்சி அடைய சமூகப் பொருளாதாரம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதேபோன்று அதற்கு அடித்தளமாக அமைவது ஒரு நாட்டின் பாதுகாப்பு ஆகும். பிற நாடுகளில் நிலவும் நிச்சயமற்ற சூழல் அங்குள்ள வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி வருகிறது “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை இராணுவத்திற்கான எந்த ஒரு அசாதாரண நிலையும் வந்தது இல்லை. இதற்கு முக்கிய காரணம் முப்படைகளின் திறன்மிக்க பங்களிப்பு தான்.”
“எல்லையில் அளப்பரிய தியாகம் செய்யும் படைவீரர்களைக் கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் குடும்பத்தினரைப் பாதுகாக்க வேண்டியதும் நமது கடமையாகும். அவர்களின் குடும்பங்களைப் பாதுகாக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ‘காக்கும் கரங்கள்’ போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.” “முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் வழங்கும் கோரிக்கை மனுக்களைத் துறை சார்ந்த அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் மூலம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்குப் பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.”
“நம் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்கள் மீது காட்டும் அன்பின் இலக்கணமாகக் கருதி, பொதுமக்கள் கொடிநாள் நன்கொடைகளை அதிக அளவில் வழங்கிட வேண்டும்.” முன்னதாக, இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 100 வயது கடந்த முன்னாள் படைவீரர் திரு. கே. சுந்தரராஜன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி ர. கீர்த்தனா மணி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (கூ.பொ) ச. சுகுணா, ஆர்மி கேண்டீன் மேலாளர் முன்னாள் கேப்டன் கணேஷ் மூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
