தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா நடத்தியுள்ள ராணுவத் தாக்குதல் மற்றும் சர்வதேச விதிமுறைகளை மீறி அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைபிடித்ததைக் கண்டித்து ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் போக்கைக் கண்டித்தும், வெனிசுலா மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுவதும் சிபிஎம் நடத்தி வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைபெற்றது.
வெனிசுலா நாட்டில் உள்ள அபரிமிதமான எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்கும் உள்நோக்கத்துடன், சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறி அமெரிக்க ராணுவம் அங்குத் தாக்குதல் தொடுத்துள்ளது. இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெனிசுலாவின் இடதுசாரி ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அராஜகமான முறையில் கைது செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், அவர்களை நியூயார்க்கில் சிறை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அடாவடிச் செயலை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், சிறைபிடிக்கப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தாலுகாக் குழு உறுப்பினர் பூமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர். குருவேல் போராட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றுகையில், “அமெரிக்கா தனது பொருளாதார நலன்களுக்காகச் சுதந்திரமான ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் அதிபரைக் கடத்திச் சிறை வைப்பதும் ஜனநாயகப் படுகொலை” என்று சாடினார். தொடர்ந்து தாலுகா குழுச் செயலாளர் என். வெங்கடேஷ் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் நா. கலையரசன், எம். சிவாஜி, எம். இராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தின் நிறைவாகப் பேசிய மாநிலக் குழு உறுப்பினர் கே.பி. பெருமாள், உலக அளவில் இடதுசாரி அரசுகளை நிலைகுலையச் செய்ய அமெரிக்கா மேற்கொள்ளும் இத்தகைய சதிகளை முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மாவட்டக் குழு உறுப்பினர் பி. செல்வராஜ் நன்றியுரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ. சந்தானம் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு அமெரிக்காவிற்கு எதிரான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
















