விமான விபத்தின் பின்னணி : கறுப்பு பெட்டி ஆய்வுக்குப் பிறகு உண்மை தெரிய வரும் என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு

ஆமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்து நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிற விசேஷ குழுவினர், தற்போது கறுப்பு பெட்டியை கைப்பற்றி அதனை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் இருந்து விபத்தின் காரணம் விரைவில் தெளிவாகும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

தந்தையின் அனுபவம் காரணமாக உணர்வு புரியும்: அமைச்சர் உருக்கம்

நிருபர்களிடம் பேசிய அமைச்சர்,

“கடந்த இரண்டு நாட்கள் எங்கள் துறைக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தையும் சாலை விபத்தில் உயிரிழந்தவர் என்பதால், இந்த துயரத்தை நன்கு உணர்கிறேன்,” என உருக்கமாக தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்றேன்

“விபத்து குறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்தோம். நான் உடனே சம்பவ இடத்திற்கு சென்று, தேவையான உதவிகளை செய்தேன். அங்கு குஜராத் அரசு அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்,” என்றும் அவர் கூறினார்.

கறுப்பு பெட்டி – விசாரணையின் முக்கிய ஆதாரம்

“நேற்று கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது முக்கிய முன்னேற்றம். அதனை ஆய்வு செய்த பிறகு, விபத்துக்கு காரணமான மெய்யான தகவல்கள் கிடைக்கும். விமான விபத்து புலனாய்வு பிரிவினர், விரைவில் விசாரணை அறிக்கையை வழங்குவார்கள்,” எனவும் கூறினார்.

விமான போக்குவரத்து துறை செயலர் விளக்கம்

விமான போக்குவரத்து துறை செயலர் சமீர் குமார் சின்ஹா கூறியதாவது:

“விபத்துக்குள்ளான விமானம் அதற்கு முன்பு பாரீஸ்-டில்லி-ஆமதாபாத் வரை விபத்யின்றி பயணித்தது. விபத்து நடந்தவுடன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. பிறகு வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு குறைந்தளவு விமானங்கள் இயக்கப்பட்டன.”

Exit mobile version