தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் தூத்துக்குடி அரசு அனல் மின் நிலையத்தில், அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மின் உற்பத்தி கடும் சரிவைச் சந்தித்துள்ளது. அனல் மின் நிலையத்தில் மொத்தம் உள்ள ஐந்து அலகுகளில், தற்போது மூன்று அலகுகள் முழுமையாக முடங்கியுள்ளதால் ஒட்டுமொத்தமாக 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மின் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 1 மற்றும் 2-வது அலகுகளில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்த இரண்டு அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், இயங்கிக் கொண்டிருந்த 5-வது அலகின் கொதிகலனில் (Boiler) திடீரெனக் கசிவு ஏற்பட்டுப் பழுது உண்டானது. இதன் காரணமாக 5-வது அலகும் உடனடியாக நிறுத்தப்பட்டது. தலா 210 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 1, 2 மற்றும் 5 ஆகிய மூன்று அலகுகளும் தற்போது செயலிழந்துள்ளதால், மொத்தம் 630 மெகா வாட் மின்சாரம் மாநில மின் தொகுப்பிற்குக் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.
தற்போது 3 மற்றும் 4-வது அலகுகள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், பழுதடைந்த 5-வது அலகைச் சீரமைக்கும் பணியில் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர். கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுதைச் சரிசெய்து, மீண்டும் உற்பத்தியைத் தொடங்க இன்னும் சில தினங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே இவ்வளவு பெரிய அளவில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மின் உற்பத்தியை இயல்பு நிலைக்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மின் வாரிய அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.













