இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றம் நாடுகளைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், “போர் நிறைவு பெற்றது” என அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையை, ஈரான் வெளிப்படையாகவே மறுத்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தாக்கியதால்தான்…
அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.06.2025) ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி மையங்களை தாக்கியது. இதன் பின்னணியில், இஸ்ரேல் அணுசக்தி மையங்களை ஈரான் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் அமெரிக்க தளத்துக்கு நேரடி தாக்குதல்
இதனைத் தொடர்ந்து, 23ம் தேதி ஈரான், கத்தாரின் தோகா அருகே உள்ள அமெரிக்க விமானப்படையின் அல்-உதெய்த் விமான தளத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால், அங்கு இருந்தவர்கள் பதற்றத்தில் கத்திக்கொண்டே ஓடிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
டிரம்ப் அறிவிப்பு… பின் அதே நேரத்தில் ஈரான் மறுப்பு!
இந்த சூழ்நிலையில்தான் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் : “இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் நிறைவடைந்துள்ளது. இருநாடுகளும் ஒப்பந்தத்தில் சேர்ந்துள்ளன. எதிர்வரும் 24 மணிநேரத்தில் அதிகாரபூர்வமாக இந்த போர் முடிவடையும்,”எனக் கூறினார். ஆனால், வெறும் சில நிமிடங்களிலேயே ஈரான் இந்த அறிவிப்பை பொய்யானது என மறுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி,
“போர் நிறுத்தம் தொடர்பான எந்த ஒப்பந்தத்திலும் ஈரான் கையெழுத்திடவில்லை. இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடர்வோம்,”
என்று தெளிவாக கூறியுள்ளார்.
கத்தார் மீது தாக்குதல் – உறவுக்கு விரிசல்
பொதுவாக ஈரான், கத்தாருடன் நட்பு வைத்திருந்தது. ஆனால், தற்போது கத்தார் நாட்டுக்குள் ஏவுகணைகளை செலுத்தியதை தொடர்ந்து இருநாடுகளின் உறவுகளில் விரிசல் ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனினும், “கத்தார் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். அமெரிக்க தளத்தைத் தான் குறிவைத்தோம்,” என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
வளைகுடா நாடுகள் கண்டனம்
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஈரான் இந்நிலையில் ராஜதந்திர நடவடிக்கைகளை விரைவில் மேற்கொண்டு பன்முகத்தன்மையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனும் அழுத்தமும் அதிகரிக்கிறது.
ரஷ்ய ஆதரவுடன் ஈரான் தைரியம் ?
இன்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்த பின்னர் தான், ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் எனும் தகவலும் வெளியாகியுள்ளது.
“ஈரானுக்கு எங்களது ஆதரவு என்றும் தொடரும்” என புதின் உறுதியளித்ததுதான் ஈரானை மேலும் தைரியமடைய வைத்திருக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
அடுத்த கட்டத்தில் என்ன நடக்கும்?
அமெரிக்கா இந்த தாக்குதலை தக்க வாய்ப்பாக பயன்படுத்தி, ஈரான் மீது புதிய ரீதியில் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேல் மீது தாக்குதல் மட்டும் நடத்தும் பொது, ஈரானுக்கு இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், அதன் பெயரில் அண்டை நாடுகளில் அமெரிக்க தளங்களை குறிவைத்தால், அது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.