நிலச்சரிவு அபாயப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டு வருவதால், அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக வருவாய்த் துறையினரால் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பகுதிகளில் நிலத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க, மரங்கள் வெட்டுவதற்கும், பாறைகள் உடைப்பதற்கும் வருவாய்த் துறை அதிகாரிகள் தொடர்ந்து தடை விதித்து வருகின்றனர். மேலும், வனத்துறையும் மரங்களை வெட்ட அனுமதி மறுத்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் பெள்ளட்டிமட்டம் பகுதியை அடுத்த எமகுண்டு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வருவாய்த் துறையினரால் கண்டறியப்பட்ட இடத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள், எந்தவித அனுமதியும் இன்றி வெட்டப்பட்டு வருவதாக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் மரங்கள் வெட்டப்படுவது குறித்து அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மரங்களை வெட்டிக் கடத்தும் கும்பல் அவசரம் அவசரமாக அந்த மரக்கட்டைகளை அகற்ற முயற்சித்துள்ளனர். அப்போது, வெட்டப்பட்ட மரக்கட்டைகள் பெள்ளட்டிமட்டத்திலிருந்து எமகுண்டு கிராமத்திற்குச் செல்லும் பிரதான குடிநீர்க் குழாயின் (Drinking Water Pipeline) மீது விழுந்தன. இதன் விளைவாக, குழாய்கள் சேதமடைந்ததால் அப்பகுதி கிராமங்களுக்குச் செல்லும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு வருவதால் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பதோடு, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையும் பாதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி கிராம மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது வனத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த குடிநீர்க் குழாயை உடனடியாகச் சரிசெய்து குடிநீர் விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் எமகுண்டு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version