தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் திருப்பூரில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பின்னலாடை இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சிகளில் ஒன்றான ‘ஹைடெக்–2026’ (KNIT-TECH) மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. திருமுருகன்பூண்டி ரிங் சாலையில் உள்ள ஹைடெக் திருப்பூர் கண்காட்சி மைய வளாகத்தில், 18-வது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சி ஜவுளித்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சுமார் 1.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீனக் கண்காட்சியை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் ஏ.சக்திவேல் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
இந்தத் தொடக்க விழாவிற்கு நிட்-டெக் கண்காட்சி தலைவர் ராயப்பன் தலைமை தாங்கினார். நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி முன்னிலை வகிக்க, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.என்.சுப்பிரமணியம் கண்காட்சிக் கையேட்டை வெளியிட்டார். அதனைத் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் பெற்றுக்கொண்டார். ஜப்பான் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) வசதி கொண்ட தையல் இயந்திரங்கள் மற்றும் துருக்கியின் நவீன டிஜிட்டல் அச்சு இயந்திரங்கள் எனப் பல நாடுகளின் தொழில்நுட்பங்கள் இங்கு அணிவகுத்துள்ளன. குறிப்பாக, 20 நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 300 அரங்குகளில் தங்களது அதிநவீனத் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய ஏ.சக்திவேல், “இந்தியா தற்போது 37 நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் உலக மக்கள் தொகையில் 67 சதவீதம் பேரை நாம் அணுக முடியும். குறிப்பாக, ஏப்ரல் 15 முதல் இங்கிலாந்து நாட்டிற்கு வரியில்லாமல் ஆடைகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய ஜவுளித்துறை அசுர வளர்ச்சி அடையும்,” எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் விதமாக இந்த ஆண்டு அதிகப்படியான ஏ.ஐ. தொழில்நுட்ப இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கேற்பை ஊக்குவிக்க மத்திய அரசு ரூ.80 ஆயிரம் வரை மானியம் வழங்கியுள்ளதாகக் கண்காட்சி தலைவர் ராயப்பன் தெரிவித்தார். முழுமையான குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில், தொழில் முனைவோருக்கான கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன. வரும் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியைப் பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். சுமார் 35 ஆயிரம் பேர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், திருப்பூர் தொழில் துறையினரிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.













