நேர மேலாண்மையே மன அழுத்தத்திற்கு மருந்து: கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் சுதா சேஷய்யன் எழுச்சி உரை!

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா, மார்ச் 5 அன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவர் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களைக் கௌரவிக்கும் இந்த விழாவிற்கு, கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி அவர்கள் தலைமை தாங்கினார். மாணவர் பேரவைத் தலைவர் எஸ். தொம்னிக் லித்வினா வரவேற்புரை ஆற்ற, கல்லூரி முதல்வர் வே. சங்கீதா அவர்கள் கடந்த ஓராண்டின் சாதனைகளைத் தொகுத்து ஆண்டறிக்கையை வாசித்தார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், சென்னை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநருமான டாக்டர் சுதா சேஷய்யன், மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உரையாற்றினார். அவர் பேசுகையில், “மாணவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து, சவால்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும். உடல், மனம், சமூகம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு நிலைகளிலும் சமச்சீரான நலனைப் பேணுவதே முழுமையான ஆரோக்கியமாகும். இன்றைய காலகட்டத்தில் முறையான நேர மேலாண்மை மட்டுமே மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் சிறந்த கருவியாகும்,” என்று வலியுறுத்தினார். மேலும், புனிதமான இந்திய மண்ணில் பிறந்ததைப் பெருமையாகக் கருதி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் தியாகங்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆண்டு விழாவின் சிகர நிகழ்ச்சியாக, ஆய்வுப் பணிகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கும், கல்வியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் சுதா சேஷய்யன் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து, கல்லூரியின் சிறந்த துறை மற்றும் சிறந்த ஆராய்ச்சித் துறைக்கான சுழற்கோப்பைகளைச் செயலர் சி.ஏ. வாசுகி வழங்கினார். மேலும், சர்வதேச ஆய்விதழ்களில் கட்டுரைகள் சமர்ப்பித்த பேராசிரியர்களுக்குச் சான்றிதழ்களுடன் ஊக்கத் தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவர் பேரவையின் செயலாளர் பி. பவன் கிருஷ்ணன் நன்றியுரை கூற, விழாவின் இறுதியில் மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.

Exit mobile version