திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN), உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. சர்வதேச அளவில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற தெற்கு பிரிட்டானியா பல்கலைக்கழகத்துடன் (University of South Brittany) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது, திருவாரூர் மண்ணில் பயிலும் மாணவர்கள் சர்வதேசத் தரத்திலான ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், ஐரோப்பியக் கல்வி முறைகளை நேரடியாகப் புரிந்துகொள்ளவும் ஒரு பொற்கால வாசலைத் திறந்து வைத்துள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த உயர்மட்ட நிகழ்வில், துணைவேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன் முன்னிலையில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் இரா. திருமுருகன் மற்றும் தெற்கு பிரிட்டானியா பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் டேவிட் மெயினர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமாக, இரு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ‘கல்விப் பரிமாற்றத் திட்டத்தின்’ (Exchange Program) கீழ் வெளிநாடுகளுக்குச் சென்று பயிலவும், அங்குள்ள ஆய்வகங்களைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், திருவாரூர் மாணவர்கள் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று நேரடிப் பயிற்சி பெறும் அரிய வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் வாயிலாகச் சர்வதேச அளவிலான கருத்தரங்குகள், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரைகளை இணைந்து வெளியிடுதல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகள் முடுக்கிவிடப்பட உள்ளன. “உலகளாவிய கல்வி மாற்றங்களை நமது மாணவர்கள் உள்வாங்கிக் கொள்வதற்கும், ஆராய்ச்சியில் புதிய உயரங்களைத் தொடுவதற்கும் இந்த உறவு ஒரு வலுவான அடித்தளமாக இருக்கும்” எனத் துணைவேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நிதி அதிகாரி சி.ஏ. ஜி.ஆர். கிரிதரன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் சுலோச்சனா சேகர், நூலகர் பேராசிரியர் பரமேஸ்வரன் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு இந்தச் சர்வதேசக் கல்விப் பயணத்தை வரவேற்றனர். இந்த ஒப்பந்தம் தமிழக உயர்கல்வித் துறையில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.















