புதுடில்லி: அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் மாநில சட்டமன்ற வளாகங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலைக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், i-n-d-i-a கூட்டணியின் சார்பில் பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் உள்ள நிலையில், மொத்தம் 788 பேருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. ஆனால், 6 இடங்கள் காலியாக உள்ளதால், 782 எம்.பிக்கள் வாக்களிக்க உள்ளனர். வெற்றிபெற குறைந்தது 392 வாக்குகள் தேவைப்படும்.
ஆதரவு நிலைமை:
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவை, மாநிலங்களவை சேர்த்து 426 வாக்குகள் உறுதி.
i-n-d-i-a கூட்டணிக்கு 313 வாக்குகள் கிடைக்கிறது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (11 உறுப்பினர்கள்) NDA-வுக்கு ஆதரவளிக்கிறது.
ஆம்ஆத்மி (12 உறுப்பினர்கள்) i-n-d-i-a கூட்டணிக்கு ஆதரவளிக்கிறது.
பிஆர்எஸ் (4 உறுப்பினர்கள்), பிஜு ஜனதா தளம் (7 உறுப்பினர்கள்) ஆகியவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
இதன் பேரில், சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குறைந்தபட்சம் 437 வாக்குகளும், சுதர்சன் ரெட்டிக்கு 325 வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றி வாய்ப்பு மிக அதிகம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.