பாம்பன் கடலில் 3 மாதங்களாக நீடிக்கும் கப்பல் போக்குவரத்துத் தடை  ரயில்வே நிர்வாகம் திணறல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் அடையாளமாகத் திகழும் பாம்பன் கடலில், புதிய ரயில் பாலம் திறக்கப்பட்ட பின்னரும் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், சரக்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்லும் அவல நிலை மூன்று மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த 2025 ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்தப் புதிய பாலத்தில், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பழைய பாலத்தின் பாதுகாப்பற்றத் தன்மை காரணமாகக் கப்பல்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிறகு தற்போது வரை (ஜனவரி 7, 2026) ஒரு கப்பல் கூட இந்தப் பாலத்தைக் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள நவீன செங்குத்துத் தூக்குப் பாலத்தை (Vertical Lift Span) திறந்து மூடுவதில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அடிக்கடி சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் தூக்குப் பாலம் சரிசெய்யப்பட்டு செப்டம்பரில் கப்பல்கள் கடக்க அனுமதிக்கப்பட்டாலும், பழைய ரயில் பாலத்தின் நிலை பெரும் அச்சுறுத்தலாக மாறியது. 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான தூக்குப் பாலம் உப்புக்காற்றால் துருப்பிடித்து வலுவிழந்திருப்பதால், அது புதிய பாலத்தின் வழியாகச் செல்லும் கப்பல்களின் மீது விழும் அபாயம் இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர். இதன்காரணமாக, பழைய பாலத்தை முழுமையாக அகற்றும் வரை கப்பல் போக்குவரத்திற்குத் தடை விதித்து தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவிட்டது.

இருப்பினும், அந்தப் பழைய பாலத்தை அகற்றுவதற்கான டெண்டர் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் யாரும் அந்தப் பணியை ஏற்க முன்வராததால், அகற்றும் பணி இன்னும் தொடங்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. இந்தப் தாமதத்தால் சென்னை மற்றும் தூத்துக்குடிக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள், இந்தியாவின் கடல் எல்லைக்குள் வர முடியாமல் இலங்கையைச் சுற்றி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இது கப்பல் நிறுவனங்களுக்குப் பெரும் எரிபொருள் செலவையும், கால விரயத்தையும் ஏற்படுத்துகிறது. மறுபுறம், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் தனுஷ்கோடியின் ஆபத்தான மணல் திட்டுக்களைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, பழைய பாலத்தை அகற்றி நீர் வழித்தடத்தைச் சீரமைக்க வேண்டும் என்பதே கடலோர மக்களின் பிரதானக் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version