நாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் வள்ளலாகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் பசுமை நேயக்கரங்கள் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு ரங்கோலி போட்டியினை மிகச்சிறப்பாக நடத்தின. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளைத் (Plastics) தவிர்த்து, பாரம்பரிய மஞ்சப்பையைப் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் தங்களது கற்பனைத் திறனைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு வண்ணமயமான ரங்கோலி கோலங்களை வரைந்து அசத்தினர். இந்த ரங்கோலி ஓவியங்கள் காண்போரை வியக்க வைத்ததோடு, மிகச்சிறந்த விழிப்புணர்வுச் செய்திகளையும் தாங்கி நின்றன. இந்நிலையில், ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா வள்ளலாகரம் ஊராட்சியில் நேற்று மிக எழுச்சியுடன் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் புலவர் சாமி. செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் (காங்கிரஸ்) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற பெண்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினார். அப்போது அவர், எதிர்காலச் சந்ததியினருக்குத் தூய்மையான காற்றையும் நிலத்தையும் விட்டுச் செல்ல இது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது குறித்த ‘மஞ்சப்பை விழிப்புணர்வு’ உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் பாபு அவர்கள் உறுதிமொழி வாசகங்களை வாசிக்க, சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட அங்கிருந்த அனைவரும் நெகிழி இல்லா தமிழகத்தைப் படைக்க உறுதி ஏற்றுக்கொண்டனர். ஏராளமான பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, வள்ளலாகரம் பகுதியில் பெரும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது
















