ஆன்மீகப் பயணம் மரணப் பயணமாக மாறிய நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் ஒன்று பெரம்பலூர் அருகே நிகழ்ந்துள்ளது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாகச் செல்வது வழக்கம். அந்த வகையில், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார்க்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மலர்க்கொடி (35), திருநாவுக்கரசு மனைவி சசிகலா (47), சுப்பிரமணி மனைவி விஜயலட்சுமி (40), பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி (57) மற்றும் சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மனைவி சித்ரா (40) ஆகியோர் அடங்கிய குழுவினர் பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் மலர்க்கொடி, சசிகலா மற்றும் விஜயலட்சுமி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸார் மற்றும் பெரம்பலூர் நகர போலீஸார் விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த சித்ரா மற்றும் ஜோதிலட்சுமி ஆகியோரை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நான்கு பெண்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த ஜோதிலட்சுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா மற்றும் கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகன் கவுதம் (24) என்பவரைப் பெரம்பலூர் நகர போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















