தமிழகத்தில் விளையாட்டுத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கென பிரத்யேகமான உட்கட்டமைப்பு வசதிகளைத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே ஐந்து இடங்களில் பாரா விளையாட்டு மையங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாகத் தஞ்சாவூர் உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களில் புதிய மையங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்க வளாகத்தில், சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தடகள மற்றும் உள்விளையாட்டு மையத்தை, தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று முறைப்படி திறந்து வைத்தனர்.
தஞ்சையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் குத்துவிளக்கேற்றி விளையாட்டு மையத்தின் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தார். இந்த நவீன மையத்தில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்காகத் தடகளம், கபடி, அடாப்டட் வாலிபால் (Adapted Volleyball), டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்குத் தனித்தனிப் பயிற்சித் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் உடல் தகுதியை மேம்படுத்தும் வகையில் அதிநவீன ஜிம் (Gym) வசதிகளும் இங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அளவில் பாரா விளையாட்டு வீரர்களுக்கு இணையாகச் சர்வதேசத் தரத்திலான பயிற்சிகளை உள்ளூரிலேயே வழங்கும் நோக்கில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், செந்தில், திருச்சி மண்டல முதுநிலை மேலாளர், பாரா விளையாட்டுச் சங்கத் தலைவர் சிவக்குமார், செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், முன்னாள் அரிமா சங்கத் தலைவரும், பாரா சங்கத் துணைத் தலைவருமான மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெ. கற்பகம், மாவட்ட விளையாட்டு அலுவலர் து. செந்தில்குமார், முன்னாள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெ. டேவிட் டேனியல், பாரா விளையாட்டு மையப் பயிற்றுநர் ஆனந்தன் மற்றும் மாவட்டப் பயிற்றுநர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த மையத்தின் மூலம் தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் இனி மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்கப் பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகப் பாரா விளையாட்டுச் சங்க நிர்வாகிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.















