லஞ்சம் கேட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

ஓட்டுநர் உரிம நடைமுறைகளுக்காக லஞ்சம் கேட்ட திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் (RTO) மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி (45), இடைத்தரகர் மூலம் பணம் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், குண்டூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பழனியப்பன், டிரைவிங் பள்ளி நடத்தி வருகிறார். பழனியப்பனின் பயிற்சி மையத்தின் மூலம், இரண்டு நபர்களுக்கு எல்.எல்.ஆர். (கற்றல் உரிமம் – Learner’s Licence) பெறுவதற்காக, திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறையாகக் கட்டணம் செலுத்தப்பட்டது.

கட்டணம் செலுத்திய ரசீதுடன் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதியை பழனியப்பன் அணுகியபோது, அவர் அந்தப் பணிக்கு அனுமதி வழங்க 1,000 ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன், உடனடியாக இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மணிகண்டனிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் அறிவுறுத்தலின்படி, லஞ்சப் பணமான 1,000 ரூபாயை, ஆய்வாளர் மணிபாரதிக்கு அலுவலகத்தில் புரோக்கராகச் செயல்படும் திலீப்குமார் (35) என்பவர் மூலமாகக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இடைத்தரகர் திலீப்குமார் மூலம் லஞ்சப் பணத்தை மணிபாரதி வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, மணிபாரதியை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். லஞ்ச ஒழிப்புப் போலீசார் அவரிடமிருந்து 1,000 ரூபாய் லஞ்சப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். அவரது மேஜையில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத மேலும் 13,000 ரூபாய் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிராட்டியூரில் உள்ள மணிபாரதியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர். சோதனையில், 1.90 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புப் போலீசார், மணிபாரதி மற்றும் இடைத்தரகர் திலீப்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version