வத்திராயிருப்பில் ராம ஐயப்ப பக்த சபா பொன்விழா ஆண்டு லட்சார்ச்சனை விழா நிறைவு!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அமைந்துள்ள அருள்மிகு ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில், ஸ்ரீ ராம ஐயப்ப பக்த சபா அறக்கட்டளை சார்பில் 50-ஆம் ஆண்டு பொன்விழா ஐயப்ப லட்சார்ச்சனை உற்சவம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படும் இந்த வழிபாட்டு நிகழ்வு, இந்த ஆண்டு பொன்விழா ஆண்டாக மலர்ந்துள்ளதால் கடந்த சில நாட்களாகப் பல்வேறு ஆன்மீகச் சடங்குகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஐயப்ப பக்தர்களின் “சரண கோஷம்” முழங்க நடைபெற்ற இந்த விழாவில், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியும், கடைசி நாளுமான நேற்று காலை முதலே பஜனை மடம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சபரிமலை ஐயப்பனின் பாரம்பரிய ஆச்சார முறைப்படி, கருவறை மற்றும் மண்டபத்தில் மூன்று மங்கல விளக்குகள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் தொடங்கின. தொடர்ந்து, வண்ணமயமான நறுமண மலர்களைக் கொண்டு ஐயப்ப சுவாமிக்கு ‘லட்சார்ச்சனை’ உற்ஸவம் மகா வைபவமாக நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற முழக்கத்துடன் சுவாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, மதியம் விழாவிற்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறக்கட்டளை சார்பில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில், விழாவின் மங்கள நிறைவாக ஆஞ்சநேய உற்ஸவம் நடைபெற்றது. பக்தியின் சிகரமாகத் திகழும் அனுமனுக்குச் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, வத்திராயிருப்பு வீதிகளில் பக்திப் பாடல்களுடன் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஐயப்ப பக்த சபா அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தனர். 50 ஆண்டுகால ஆன்மீகப் பாரம்பரியத்தைத் தாங்கி நிற்கும் இந்த லட்சார்ச்சனை விழா, பொன்விழா ஆண்டை முன்னிட்டு முந்தைய ஆண்டுகளை விடக் கூடுதலான பக்தர்களின் பங்கேற்புடன் பக்தி மயமாக நிறைவுற்றது.

Exit mobile version