தென் மாவட்டங்களில் புரட்டிப்போட்ட கனமழை குற்றால அருவிகளில் நள்ளிரவு கடும் வெள்ளப்பெருக்கு!

தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர், தேனி மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் திடீரெனப் பெய்த அதி கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பெருமழையின் காரணமாக, உலகப் புகழ்பெற்ற குற்றால அருவிகளில் நேற்று நள்ளிரவு பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவி, மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால், பாதுகாப்பு கருதிப் சுற்றுலாப் பயணிகள் அருவிகளுக்குச் செல்ல நள்ளிரவே தடை விதிக்கப்பட்டது. மலைப்பகுதிகளில் பெய்த மழையினால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதோடு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் மேக வெடிப்பு போன்ற கனமழை பெய்தது. குறிப்பாகக் கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், கோபாலபுரம் மற்றும் சேசபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதமடையக்கூடும் என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

தேனி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகியுள்ளது. இந்தத் திடீர் மழையினால் வறண்டு காணப்பட்ட ஓடைகள் மற்றும் வாய்க்கால்களுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. ஒருபுறம் கோடை வெப்பத்தைத் தணிக்கும் விதமாக இந்த மழை அமைந்திருந்தாலும், பலத்த காற்றினால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. வானிலை ஆய்வு மையம் வரும் 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் பேரிடர் மீட்புக் குழுவினரைத் தயார் நிலையில் வைத்துள்ளன. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version