பெங்களூர் : ஐபிஎல் 2025 கோப்பையை ஆர்சிபி (RCB) அணி வென்றதை தொடர்ந்து, கடந்த ஜூன் 4ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தார்கள். இதில் 6 பெண்கள் உட்பட பலர் உயிரிழந்த நிலையில், 21 வயதான பூமிக் லட்சுமணனும் அதில் ஒருவர். அவரது மரணம் அவரது குடும்பத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூமிக்கின் இறுதிச் சடங்கு கடந்த ஜூன் 7ஆம் தேதி நடைபெற்றது. கல்லறையில் மகனைக் குழித்துப்பதித்த தந்தை பி.டி.லட்சுமணன், மகனின் சமாதியிலேயே உட்கார்ந்து கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. “மகனின் சமாதியில் நானும் தங்கி விடுகிறேன்… என்னை இங்கேயே விட்டுவிடுங்கள்,” என்ற உருக்கமான வார்த்தைகள், நெஞ்சை பதைக்கும் காட்சியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கர்நாடக பாஜக கட்சி, அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. “கொலைகார முதல்வர் சித்தராமையா, கொலைகார துணை முதல்வர் டி.கே. சிவகுமார், உங்கள் பிடிவாதத்தால் 11 குடும்பங்கள் துயரத்தில் மூழ்கியுள்ளன” என கடுமையாக பதிவிட்டுள்ளனர்.
பூமிக்கின் தந்தை லட்சுமணன் துயரமுடன் கூறியது :
“எனது ஒரே மகனை இழந்துவிட்டேன். அவனுக்கு கிரிக்கெட் மீதோ, திரைப்படம் மீதோ ஆசை கிடையாது. நண்பர்கள் வற்புறுத்தியதால் மட்டும் தான் அந்த விழாவுக்கு சென்றான். மற்ற நண்பர்கள் அனைவரும் உயிர்தப்பினார்கள். ஆனால் என் மகன் மட்டும் உயிரிழந்தான்.
ஆர்சிபி-யின் வெற்றிக்காக என் மகனின் உயிரை இழந்தேன். அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். ஆனால் சாமான்ய மக்களைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை. போதிய பாதுகாப்பு இல்லாமல் விழா நடத்தப்பட்டது. இதற்கு யார் பொறுப்பு எடுப்பார்கள் ?
அரசும், ஆர்சிபி அணியும் நம்மை சந்திக்கவே இல்லை. என் மகனின் எதிர்காலத்திற்காக வாங்கிய நிலத்திலேயே இப்போது அவனை புதைத்திருக்கிறேன். இது போன்ற துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது.”
பூமிக் லட்சுமணன், ஒரு இன்ஜினியரிங் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர் ஆவார். பெற்றோரிடம் கூறாமலேயே ஆர்சிபியின் வெற்றி விழாவிற்கு சென்ற அவர், இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம், இளம் தலைமுறையினர் பெற்றோரின் ஆலோசனைகளை மதிக்க வேண்டும் என்பதற்கானஎடுத்துக்காட்டாக அமைந்துள்ளது