முத்துப்பேட்டையில் 42 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டு மனைப் பட்டா மாவட்ட ஆட்சியர் வழங்கினர்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கும் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முத்துப்பேட்டை வட்டம் தெற்கு பள்ளியமேடு கிராமத்தைச் சேர்ந்த நிலமற்ற ஏழை எளிய மக்கள் 42 பேருக்கு, அவர்கள் நீண்ட நாட்களாகக் கோரி வந்த அரசு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் வழங்கினர். பட்டாவைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், தங்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ள வழிவகை செய்த அரசுக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த விழாவிற்குப் பிறகு, முத்துப்பேட்டை ஒன்றியம் ஆலங்காடு ஊராட்சிப் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ‘வட்டார நாற்றங்கால்’ (Block Nursery) பணிகளை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பசுமைத் தமிழகம் திட்டத்தின் கீழ் அதிகப்படியான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யும் நோக்கில் இந்த நாற்றங்கால் உருவாக்கப்பட்டு வருகிறது. அங்கு வளர்க்கப்படும் நாற்றுகளின் தரம், பராமரிப்பு முறைகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பணிகளைத் தொய்வின்றி முடித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் மரக்கன்றுகளை நடவு செய்யத் தயார் நிலையில் வைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றியழகன், விஜயலட்சுமி மற்றும் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். நிலமற்ற ஏழைகளுக்குப் பட்டா வழங்கப்பட்டதும், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான நாற்றங்கால் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்ததும் இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version