“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக உள்கட்டமைப்பை நோக்கி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஆரணியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம்.பி. தரணிவேந்தன் தலைமையிலான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்வில் உரையாற்றிய அவர், “அதிமுகவில் தலைமையை பிடிக்க உள்ளேயே கடுமையான போட்டி நீடிக்கிறது. எடப்பாடி பழனிசாமியை அரசியலிலே எப்படி பின்தள்ளுவது என்று அவர்களது சொந்த உறுப்பினர்களே திட்டமிட்டு வருகின்றனர்” என தெரிவித்தார்.

மேலும், அதிமுகவில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறும் சூழல் உருவாகியுள்ளதாகவும், ஏதேனும் ஒரு விஷயத்தில் மட்டுமே அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறது என்றார் “அது அமித்ஷாவை போற்றி பேசுவதில் மட்டுமே!”

அதிமுக–பாஜக கூட்டணியையும் விமர்சித்த அவர், “8 மாதங்கள் ஆனாலும் இந்த கூட்டணியை நம்பி வேறு எந்த கட்சியும் சேரவில்லை. பாசிச பாஜகவும், அடிமை அதிமுகவும் தமிழர்கள் ஏற்கப்போவதில்லை. வெறுப்பு அரசியலை தூக்கும் சக்திகளிடமிருந்து தமிழகத்தை காப்போம்” என்று கருத்து தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தைக் குறித்தும் உதயநிதி சாடினார். “ஒரு தொகுதியிலிருந்து மற்றொன்றுக்கு சென்று மக்கள் சந்திக்க வேண்டியவர், கட்சிக்குள் உள்ள தலைவர்களின் விமர்சனங்களைத் தான் எதிர்கொண்டு வருகிறார்” என்று கூறினார்.

Exit mobile version