முதலமைச்சரின் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் வெறும் வார்த்தை ஜாலம்” – டாக்டர் சரவணன் சாடல்!

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு வரும் புள்ளிவிவரங்கள் எதார்த்தத்திற்குப் புறம்பானவை என்றும், அவை மக்களைத் திசைதிருப்பும் முயற்சி என்றும் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு விழாக்களில் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் செய்யாத சாதனைகளை இந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் செய்துவிட்டதாக முதலமைச்சர் கூறுவது, “முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும்” செயலுக்கு ஒப்பானது என்று சாடினார். வானத்தைப் போர்வையால் மறைக்க முடியாது என்பதைப் போலவே, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்காக ஆற்றிய அரிய பணிகளை, தற்போதைய முதலமைச்சரின் வார்த்தை ஜாலங்களால் ஒருபோதும் மறைத்துவிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, கடந்த 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதையும் அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்த போதும், தமிழகத்தில் எடப்பாடியாரின் சிறப்பான நிர்வாகத்தினால் பொருளாதார வளர்ச்சி நிலைநிறுத்தப்பட்டது. சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் அப்போதைய அதிமுக அரசின் பொருளாதாரக் கையாளுகையை வெகுவாகப் பாராட்டின என்பதை அவர் நினைவு கூர்ந்தார். தற்போது தமிழகம் 11.19 சதவீதப் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாக முதலமைச்சர் கூறி வருவதைச் சுட்டிக்காட்டிய டாக்டர் சரவணன், பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் என்பவை ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படுகின்றன என்றும், அவை பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகே இறுதி செய்யப்படுகின்றன என்றும் விளக்கமளித்தார். கடந்த 2022-23 நிதியாண்டிலும் ஆரம்பத்தில் அதிக வளர்ச்சி காட்டப்பட்டு, பின்னர் தற்காலிக மதிப்பீட்டில் அது 6.17 சதவீதமாகக் குறைந்த கசப்பான உண்மையை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக அரசு இலக்கு வைத்துள்ள 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய வேண்டுமானால், மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்குத் தொடர்ந்து 14 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளின் வளர்ச்சி விகிதங்களை ஆய்வு செய்தால் அவை 7.89%, 6.17%, மற்றும் 9.26% என்ற அளவிலேயே ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. தற்போது கூறப்படும் 11.19% வளர்ச்சியும் கூடத் தேவையான 14 சதவீதத்தை விட 3 சதவீதம் குறைவாகவே உள்ளது. இந்தச் சூழலில், உண்மை நிலையை மறைத்துவிட்டு வெற்றிக் கோஷம் எழுப்புவது நகைப்பிற்குரியது என்றார். மேலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் விலைவாசி உயர்வு 17 சதவீதம் அதிகமாக உள்ளது குறித்து முதலமைச்சர் வாய் திறக்க மறுப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ள நிலையில், காகிதத்தில் காட்டப்படும் புள்ளிவிவரங்கள் சாமானிய மக்களின் வயிற்றில் பால் வார்க்காது என்றும், திமுக அரசின் இத்தகைய மாயாஜாலப் பேச்சுகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் டாக்டர் சரவணன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version