2026 தேர்தல் சனாதனத்திற்கும் சமத்துவத்திற்குமான இறுதி யுத்தம் திருச்சியில் திருமாவளவன் அனல் பறக்கும் பேச்சு!

திருச்சியில் இன்று நடைபெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் எழுச்சி நடைபயணத் தொடக்க விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, அது இரு வேறு சித்தாந்தங்களுக்கு இடையிலான மிக முக்கியமானப் போர் என்று வர்ணித்தார். தமிழக அரசியல் களம் தற்போது இரு துருவங்களாகப் பிரிந்துள்ளதாகவும், ஒருபுறம் சனாதன சக்திகளும், மறுபுறம் ஜனநாயக சக்திகளும் அணிவகுத்து நிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்துள்ள ஜனநாயக சக்திகளின் பலமே தமிழகத்தின் அரணாக விளங்குவதாகக் குறிப்பிட்ட திருமாவளவன், 2026 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நாம் சந்திக்கப் போகும் தேர்தல், சனாதனக் கொள்கைக்கும் சமூக சமத்துவத்திற்கும் இடையிலான ஒரு மாபெரும் யுத்தமாக அமையும் என்றார். இது வழக்கமான அல்லது சராசரியான தேர்தல் கிடையாது என்றும், தமிழகத்தின் தனித்துவமான அடையாளத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் சக்திகளை வீழ்த்த வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் கைகளில் இருப்பதாகவும் அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், “தமிழகத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் சனாதன சக்திகளுக்குத் துணையாக, பல்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டு சிலர் திரிபுவாத அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். இவர்களை ஒரே களத்தில் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அந்த வலிமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அணிக்கு இருக்கிறது. திராவிடம் என்ற சித்தாந்தம் இருந்ததால்தான் இன்று இந்தி திணிப்பைத் தடுத்து நிறுத்தி, தமிழை உயிர்ப்போடு வைத்திருக்க முடிகிறது. திராவிடம் என்பது சமூகநீதி, சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தின் அடையாளம்” என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

வைகோ அவர்களின் இந்த நடைபயணத்தைத் “திராவிட நடைபயணம்” அல்லது “சமத்துவ நடைபயணம்” என்று அழைப்பதே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கூறிய திருமாவளவன், மதவாத மற்றும் ஜாதிய சக்திகளைத் தமிழக மண்ணிலிருந்து அப்புறப்படுத்தத் தங்களின் கூட்டணி உறுதிப்பாட்டோடு கைகோர்த்து நிற்பதாகக் கூறி உரையை நிறைவு செய்தார். இந்த விழாவில் திமுக கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்களும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்துகொண்டு எழுச்சியூட்டினர்.

Exit mobile version