‘போதையில்’ வந்த ஆசிரியர் – இடமாற்றம் செய்யப்பட்டார்

வெண்ணந்தூர் :
வெண்ணந்தூர் அருகே உள்ள அளவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் ‘குடிபோதையில்’ பள்ளிக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி, அந்த பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியர் பிரபாகரன், மதுபோதையில் பள்ளிக்கு வந்து, பள்ளி வளாகத்தில் அமைந்த குடிநீர் குழாயை உடைத்ததாக தெரிகிறது. அதோடு, மாணவர் சேர்க்கைக்காக வந்த பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குற்றச்சாட்டு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, கடந்த 3ஆம் தேதி, பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பெற்றோர் முறைப்பாடு தெரிவித்து முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து, நேற்று, வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில், பள்ளியில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் அவர் கூறியதாவது :
“போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பிரபாகரன் தொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளிவந்ததை அடுத்து, அவருக்கு வெண்ணந்தூர் பகுதியில் உள்ள மற்றொரு தொடக்கப்பள்ளிக்கு தற்காலிக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்மீது உரிய விசாரணை நடந்து, மேலதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள்.” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது :
“மாணவர் சேர்க்கை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பெற்றோர் அரசு பள்ளியை நம்பிக்கையுடன் தேர்வு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்த பாடங்கள் எடுத்துவருவார்கள். பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

Exit mobile version