சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் வந்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையே ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 60 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி வோங் இந்தியா வருகை தந்துள்ளார்.
இந்த பயணத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர் வோங், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார். மேலும், பிரதமர் மோடி அவருக்கு மதிய விருந்தை அளிக்க உள்ளார். அதேபோல், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடனும் அவர் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர் ராஜ்காட்டில் மலர்மாலை சமர்ப்பிக்கிறார். மேலும், டில்லியில் நடைபெறவுள்ள இந்தியா-சிங்கப்பூர் 60ஆவது ஆண்டு உறவு கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அதோடு, வெளிநாடுகளில் வாழும் சிங்கப்பூரர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.