திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்ததிருக்கோயில் சுமார் 2000 வருட காலத்தை சார்ந்ததாக கருதப்படுகிறது.
ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது.
தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்த கோயில் உள்ளது. கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டு இங்கு உள்ளது .
முன்னொரு காலத்தில் ஒரு வணிகர், இந்த கோயிலிலின் வழியாக மாடுகள் மீது மிளகு மூட்டைகளை ஏற்றி சென்றார். அங்கு வந்த ஒருவர், ‘மூட்டையில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டுள்ளார்.
மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, வணிகர் பாசிப்பயிறு இருப்பதாக பொய்யாக கூறினார் பின்னர் அங்கிருந்து சந்தைக்குச் சென்று, மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, அதில் பாசிப்பயிறுதான் இருந்துள்ளன.
கோயிலின் முன்பாக வைத்து பொய்யுரைத்ததற்கு இறைவன் அளித்த தண்டனையை எண்ணி, வருந்திய அந்த வணிகர், இறைவனை மனமுருக வேண்டினார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது. ‘உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து என்னை வணங்கு, உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்’ என்றது குரல்.
வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கினார். இதையடுத்து பாசிப்பயிராக இருந்த மூட்டைகள், மிளகு மூட்டைகளாக மாறின. இப்பகுதி மக்கள், இத்தல இறைவனை ‘மிளகு ஈஸ்வரர்’ என்றே அழைக்கிறார்கள்.

அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை நிலவுகிறது. இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் என்னும், குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.
இக் கோயிலுக்கு ராஜகோபுரமும் கொடிமரமும் கிடையாது. கோயிலை சுற்றி அகழி போன்ற அமைப்பு காணப்படுகிறது. கோயிலின் உள்ளே நுழைந்தால் அம்மன் சன்னதி வலது புறத்தில் காணப்படுகிறது .
சிவன் சன்னதிக்கு நேரே வாசல் இல்லமால் தெற்கு புறத்தில் வாசல் அமைந்துள்ளது , யோக சனீஸ்வரர், சுக்ரீவர் திரு உருவ சிலைகள் உள்ளன . அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது.
இங்கு வீற்றியிருக்கும் சுக்ரீஸ்வரர் 31 .5 அடி உயரம் கொண்டதாகும் , 28 ஆகம விதிகளை குறிக்கும் வகையில் 28 அடி லிங்கம் கருவறையில் கிழ் புதைக்கப்பட்டு 3 .5 அடி வரை மட்டும் லிங்கம் வெளியே தெரியும் படி அமைத்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது .
சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மனும் உள்ளார்.
பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு கூறுகிறது .
தொல்லியல் துறையினர் கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது.
இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது. கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார்.

மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, வணங்கியுள்ளார்.
பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது.
சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷகாலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.
இக்கோயிலில் உடலில் மரு உள்ளவர்கள் மிளகு எடுத்துவந்து இத்தல ஈசனுக்கு வேண்டி அவ் மிளகை வைத்து வழிபாடு செய்தால் உடலில் உள்ள மரு மறையும் என்ற நம்பிக்கை உள்ளது .
இறைவனின் கருவறைக்கு வலது புறம் ஆவுடைநாயகி என்ற பெயரில் அம்மன், தனிச் சன்னிதியில் உள்ளார். கோயிலில் மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது. திருச்சுற்றில் விநாயகர், மயில்வாகனம், மூன்று லிங்கத்திருமேனிகள், பைரவர், துர்க்கை, சூரியன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.
மேலும் கோயிலில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கும், பஞ்ச லிங்கங்கள் இருக்கின்றன. மூலவரே அக்னி லிங்கமாக பார்க்கப்படுகிறார். வில்வ மரத்தின் கீழ், ஆகாச லிங்கம் அமைந்துள்ளது. மற்ற மூன்று லிங்கங்களான குபேர லிங்கம், வாயு லிங்கம், நைருதி லிங்கம் கோவிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன.