தெரு நாயை சுட முயன்றபோது மாணவன் காயம் : செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

செங்கல்பட்டு : தெருநாயை துப்பாக்கியால் சுட முயன்றபோது தவறுதலாக எய்த குண்டுகள் பள்ளி மாணவனைப் பாய்ந்த சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொங்கரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் குறளரசன், ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவன். நேற்று காலை, அவர் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்த போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட தெருநாயைத் துப்பாக்கியால் சுட சரத்குமார் என்ற நாடோடி பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த நபர் முயற்சி செய்துள்ளார்.

சரத்குமார் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய ஈயக் குண்டுகள் சுவற்றில் பட்டு விலகி, அந்த வழியாக சென்ற குறளரசன் என்பவரது தலையில் பாய்ந்துள்ளன. இதில் சிறுவன் படுகாயமடைந்துள்ளார். உடனே அவரை பெற்றோர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சித்தாமூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சரத்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version