ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கொடுமுரு 7-வது மலையில் பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. தெலுங்கு மாதத்தின் 3-வது திங்கட்கிழமையான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
பக்தர்கள் மலை இடுக்குகளில் உள்ள தேள்களை தேடிப்பிடித்து நூல்களில் மாலையாக கட்டினர். பின்னர் வெங்கடேஸ்வர சாமிக்கு அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர்.
தேள்களைப் பிடித்து மாலையாக கட்டும் பக்தர்களுக்கு தேள் கொட்டவில்லை. பொதுவாக பக்தர்கள் சாமிக்கு பட்டு வஸ்திரம் மலர் மாலை மற்றும் ஆபரணங்களை அணிவித்து பூஜைகள் செய்வது வழக்கம்.
ஆனால் இந்த வெங்கடேஸ்வர சாமிக்கு தேள் மாலை அணிவித்தால் வேண்டிய வரங்களை நிறைவேற்றி தருவார் என்பது ஐதீகம். இதேபோல் சில பக்தர்கள் தேள்களை பிடித்து தங்களது முகம், தலை, கைகளில் வைத்து நூதன முறையில் வழிபட்டனர்.