மதுரையில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவை நெகிழ வைத்த ஸ்டாலினின் அரசியல் நாகரிகம்!

அரசியல் களத்தில் விமர்சனங்களைக் கடந்து தனிமனித மாண்பும், பெருந்தன்மையும் எவ்வளவு முக்கியம் என்பதைப் பறைசாற்றும் விதமாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதி நிஷாபானு அவர்களின் மகன் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, அங்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடனான தனது சந்திப்பு குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு முதலமைச்சர் மீதான தனது அபிப்ராயம் முன்பை விடக் கணிசமாக உயர்ந்துள்ளதாக அவர் மனந்திறந்து பாராட்டியுள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சற்று முன்னதாகவே வந்துவிட்ட நீதிபதி கட்ஜூ, மேடையில் அமர்ந்துவிட்டுப் பின்னர் கீழே இறங்கி முன் வரிசையில் உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திவிட்டுத் திரும்பும் போது, நீதிபதி கட்ஜூ வந்திருக்கும் தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டவுடன் சற்றும் தாமதிக்காமல், மேடையிலிருந்து விறுவிறுவெனக் கீழே இறங்கி வந்து நீதிபதி கட்ஜூவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். “உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, நீங்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும்; உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என முதலமைச்சர் மிகவும் மரியாதையுடன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தச் செயலால் நெகிழ்ந்து போன நீதிபதி கட்ஜூ, “நான் இதற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பலமுறை விமர்சிப்பவனாக இருந்தேன். அது அவருக்குத் தெரிந்திருந்த போதிலும், என்னிடம் அவர் காட்டிய அந்தப் பெருந்தன்மையும், கனிவான உபசரிப்பும் என்னை மிகவும் வியக்க வைத்தது” என்று குறிப்பிட்டுள்ளார். அரசியலில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், ஒரு மூத்த நீதிபதிக்கு அளிக்க வேண்டிய உரிய மரியாதையைத் தேடி வந்து அளித்த முதலமைச்சரின் இந்தச் செயல், தமிழகத்தின் பாரம்பரியமிக்க அரசியல் நாகரிகத்தைப் பிரதிபலிப்பதாக சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Exit mobile version