பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்வி நிறுவனத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்வி நிறுவனங்களின் கலையரங்கத்தில், பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உயரிய நோக்கில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. தமிழக அரசின் இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் இம்முகாமினை, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு, அங்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சைகள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேரூரில் நடைபெற்ற இம்முகாமில், பொது மருத்துவம், கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் தாய்-சேய் நல ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. முகாமிற்கு வருகை தந்திருந்த பயனாளிகளிடம் ஆட்சியர் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகளின் தரம் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முறையான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பேரூர் பேரூராட்சித் தலைவர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, மருத்துவ நலப் பணிகளின் இணை இயக்குநர் சுமதி ஆகியோர் முகாமின் மருத்துவ ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர். மேலும், மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி மற்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் அனுராதா ஆகியோர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.

இந்த மருத்துவ முகாமில் பேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய நடமாடும் மருத்துவக் குழுவினரும் இதில் பங்கேற்று, தேவையுள்ளவர்களுக்கு உடனடி மருந்துப் பொருட்களையும் வழங்கினர். தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முகாமிற்கான ஒருகிணைப்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். இத்தகைய சிறப்பு முகாம்கள் மூலம் கிராமப்புற மக்களின் நோயற்ற வாழ்வு உறுதி செய்யப்படுவதாகப் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Exit mobile version