தமிழகத்தில் நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதைக் கண்டித்து, அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக அரசை மிகக்கடுமையாகச் சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உலக சரித்திரத்தில் இடம்பிடித்த ஹிட்லர், முசோலினி மற்றும் நீரோ போன்ற சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாகவே முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தமிழக மக்கள் பார்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 56 மாத கால திமுக ஆட்சியில், காவல் துறையைத் தனது ஏவல் துறையாக முதல்வர் மாற்றி வைத்திருப்பதே சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்க முதன்மைக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது 6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை யாரும் நிம்மதியாகச் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் நிலவுவதாக எடப்பாடியார் கவலை தெரிவித்துள்ளார். போதை ஆசாமிகள் எந்த நேரத்தில் பெண்களைச் சீரழிப்பார்கள் அல்லது கொலை செய்வார்கள் என்ற அச்சத்திலேயே மக்கள் வாழ வேண்டியுள்ளது. சென்னை தரமணியில் வெளிமாநில இளம்பெண், அவரது கணவன் மற்றும் 2 வயது குழந்தை அடித்துக் கொல்லப்பட்ட கொடூரத்தையும், நந்தனம் கலைக்கல்லூரி கேன்டீனில் பணியாற்றிய அரியலூர் பெண், திமுக பிரமுகர் மற்றும் அவரது நண்பர்களால் சீரழிக்கப்பட்டதையும் அவர் அறிக்கையில் கோடிட்டுக் காட்டியுள்ளார். “ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல”, மாநிலமே குற்றச் செயல்களால் பதற்றத்தில் இருக்கும்போது முதல்வர் மகளிர் மாநாடு நடத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.
நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியால் தமிழகம் இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக மாறியுள்ளதாகச் சாடியுள்ள அவர், நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் முதல்வர் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து கோடிக்கணக்கான திட்டங்களுக்குப் போலியாக அடிக்கல் நாட்டுவதாகக் கூறியுள்ளார். பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை போதைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கும், குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சியினர் அடைக்கலம் கொடுப்பதற்குமே போலீஸார் மீதான பயம் குறைந்ததற்குக் காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்துத் தங்கள் பரம்பரையை மட்டும் வளப்படுத்தும் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டதாகவும், வரும் தேர்தலில் மக்கள் நிச்சயம் மாற்றத்தைத் தருவார்கள் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

















