மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, முல்லைப் பெரியாறில் இருந்து மதுரைக்குக் குடிநீர் கொண்டு வரும் அம்ரூத் திட்டம் முழுமையடையாமலேயே முதலமைச்சர் ஸ்டாலின் அவசரமாகத் திறந்து வைக்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் அ.தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது: “மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவைக்காக முல்லைப் பெரியாறில் இருந்து செயல்படுத்தப்படும் அம்ரூத் திட்டம் முழுமை அடையாமலே முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (இன்று) திறந்து வைக்கிறார். எதற்காக இவ்வளவு அவசரம்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், கடந்த இரண்டு மாதங்களாக மேயர் இல்லாததால் மாநகராட்சிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அ.தி.மு.க. மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சி விட்டுச் சென்றது குறித்துப் பேசிய செல்லூர் ராஜூ, “செங்கோட்டையன் வெளியேறியது அ.தி.மு.க. எனும் ஆல மரத்தில் ஒரு இலை உதிர்வது போல்தான். பழுத்த இலை ஒன்று கீழே விழுவதால் ஆலமரம் சாய்ந்துவிட்டது என்று அர்த்தமில்லை. செங்கோட்டையனுக்கு மக்கள் ஓட்டுப் போடவில்லை; இரட்டை இலைக்காக, அ.தி.மு.க.வுக்காகத்தான் மக்கள் ஓட்டுப் போட்டார்கள்,” என்றார்.
“எம்.ஜி.ஆர். கட்சியில் தான் கடைசி வரை இருப்பேன் என்று சொல்பவர்தானே உண்மையாக ரோஷம் உள்ளவர். செங்கோட்டையன் வெளியேறிப் போனது நியாயமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், “தமிழக அரசியலில் புதிதாக யார் வந்தாலும் இப்போது மக்கள் மத்தியில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர். காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போலத்தான், தானும் முதல்வர் ஆவேன் என்று விஜய் பேசிக் கொண்டிருக்கிறார்,” என்று விமர்சனம் செய்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்தது குறித்த கேள்விக்கு அவர் விளக்கமளித்தார்: “மதுரையில் இந்து – இஸ்லாமியர்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்கிறோம். தி.மு.க. பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது.” “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நயினார் நாகேந்திரனை அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா சென்று சந்தித்தது மனிதாபிமான அடிப்படையில் தான்.” “நட்பின் அடிப்படையில் தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தோம். நாங்கள் என்ன பா.ஜ.க.வுடன் சேர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்துக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்தோமா? இல்லையே.” “கூட்டணியில் இருந்தாலும் கொள்கை தனித்தனியாக இருக்கும். தேர்தலில் பார்ட்னராக இருப்போம். எந்த நிலைமை வந்தாலும் நான் அ.தி.மு.க. வேட்டியை மாற்ற மாட்டேன்” என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
பேட்டியின்போது நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ். பாண்டியன், சோலை ராஜா, பா. குமார், உசிலை பேராசிரியர் ஜெயபால், வி.பி.ஆர். செல்வகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் உடனிருந்தனர்.















