இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு துறைகள் குறித்து விவாதித்தார்.
மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று இந்தியா வந்த ஹரிணி அமரசூரியாவுக்கு, டில்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர், டில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள ஹிந்து கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வி மற்றும் இளைஞர் முன்னேற்றம் குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த ஹரிணி அமரசூரியாவுடன், இரு நாடுகளுக்கிடையேயான கல்வி, பெண்கள் முன்னேற்றம், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் மீனவர் நலன் உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது :
“இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளின் மக்களும் பிராந்திய வளர்ச்சிக்கும், நெருங்கிய ஒத்துழைப்புக்கும் முக்கிய பங்காற்றுவோம்,” என தெரிவித்துள்ளார்.

















