2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் விருப்ப மனுக்கள் பெறும் படலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில் கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற தற்போதைய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மூன்றாவது முறையாகப் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். ஆனால், அவருக்குப் போட்டியாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 15-க்கும் மேற்பட்டோர் அதே தொகுதிக்கு ‘சீட்’ கேட்டு மேலிடத்தில் விண்ணப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சருக்கு இணையாக முன்னாள் மேயர் குழந்தைவேலு, திமுக கவுன்சிலர்கள் குழுத் தலைவரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மா.ஜெயராம், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி மற்றும் கவுன்சிலர் நூர்ஜகான் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களைக் குவித்துள்ளனர். குறிப்பாக, அமைச்சருக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாகவே களமிறங்கியிருப்பது தொகுதியில் உள்ள ‘முட்டல், மோதல்’ போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இருப்பினும், அமைச்சரின் ஆதரவாளர்கள் 15 பேர் அவருக்கு ஆதரவாகவும் மனு அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மதுரை மத்தி, வடக்கு, மேற்கு, கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், மத்திய தொகுதியில் நிலவும் அதிருப்தியைச் சரி செய்யாவிட்டால் ‘உள்ளடி வேலைகள்’ நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மதுரை வந்திருந்த முதல்வரின் மருமகன் சபரீசன், மாநகர்ச் செயலாளர் தளபதி மற்றும் முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, பழனிவேல் தியாகராஜனே மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதால், அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என மேலிட உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.















