சர்வதேச சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த சில நாட்களாக வீசி வரும் கடும் சூறாவளி காற்று காரணமாகச் சாலை முழுவதும் மணல் மேடுகள் குவிந்து கிடக்கின்றன. ‘மணல் புயல்’ போன்ற சூழல் நிலவுவதால், தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான முக்கியச் சாலையின் இருபுறமும் மணல் ஆக்கிரமித்துள்ளது. இதனால் தனுஷ்கோடியின் எழிலைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றினால் தள்ளப்படும் கடற்கரை மணல், தார் சாலையை மூடியுள்ளதால் வாகனங்கள் செல்வதற்கே வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சாலையின் வளைவுகளில் குவியலாக உள்ள மணலினால், வாகனங்கள் செல்லும்போது நிலைதடுமாறிச் சறுக்கும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் மணலில் சிக்கி கீழே விழுந்து காயமடைவது தொடர்கதையாகி வருகிறது. மணல் பரவியுள்ள இடங்களில் வாகனங்களின் டயர்கள் பிடிமானம் இழப்பதால், எதிரே வரும் வாகனங்களின் மீது மோதி பெரும் விபத்துகள் ஏற்படக்கூடும் என வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். தனுஷ்கோடி சாலை கடல் மட்டத்திற்கு இணையாகவும், திறந்த வெளியாகவும் அமைந்துள்ளதால், காற்று வீசும் போதெல்லாம் மணல் குவியல்கள் உருவாவது வழக்கமாக உள்ளது.
இது குறித்துச் சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கூறுகையில், “தனுஷ்கோடி சாலை மிக முக்கியமான சுற்றுலா வழித்தடமாகும். இங்கு மணல் குவியும் போதெல்லாம் அதனை உடனடியாக அகற்ற வேண்டியது தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கடமையாகும். ஆனால், பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இதனைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் இந்த அலட்சியப்போக்கால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது,” என வருத்தத்துடன் தெரிவித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் சாலையில் உள்ள மணலை அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.















