ரஷ்யா போரை நிறுத்தும் எந்த அறிகுறியும் காட்டவில்லை என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அலாஸ்காவில் மூன்று மணி நேரம் உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது :
“போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை. போரை நிறுத்தும் எந்த அறிகுறியும் காணப்படவில்லை. பேச்சுவார்த்தை நடந்த அதே நாளிலேயே ரஷ்யா நிரபராத மக்களை கொன்றது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பயனுள்ள முறையில் எவ்வாறு முன்னேறலாம் என்பதை விவாதித்தோம். போருக்கு நீதி மிக்க முடிவு தேவை. உக்ரைன் அதற்காக வேலை செய்யத் தயாராக உள்ளது,” என்றார்.
மேலும், அவர் தொடர்ந்தபோது,
“அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டில் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். வரவிருக்கும் விவாதங்களுக்கு தயாராகி வருகிறோம். ரஷ்யா தொடங்கிய இந்தப் போர் பல ஆண்டுகளாக இழுத்து நீடிக்கிறது. கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். உக்ரைன், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய தரப்புகளின் உரையாடலால் மட்டுமே பயனுள்ள முடிவுகள் சாத்தியமாகும். பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை; நீடித்த அமைதி தேவை. உண்மையான முடிவுகளை அடைய உதவிய அனைவருக்கும் நன்றி,” என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.













