இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து இஸ்ரோ (ISRO) தலைவர் நாராயணன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, வரும் 2035ஆம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’ (பிஏஎஸ்) என்ற பெயரில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் விண்வெளியில் அமைக்கப்படும் என்றும், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் நாட்டின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் ராக்கெட் ஏவப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் மட்டுமே விண்வெளியில் சொந்த நிலையங்களைக் கொண்டுள்ள நிலையில், அந்தப் போட்டியில் தற்போது இந்தியாவும் இணைய உள்ளது.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்.) அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்திலும், சீனாவின் தியாங்கோங் விண்வெளி நிலையம் தனியாகவும் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச நிலையத்திற்கு முன்னோடியாகச் செயல்பட்ட ரஷ்யாவின் ‘மிர்’ நிலையம் தற்போது செயல்பாட்டில் இல்லை. ரஷ்யா தற்போது ‘ரஷ்யன் ஆர்பிட்டல் சர்வீஸ்’ என்ற புதிய நிலையத்தை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது.இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அறிவிப்புப்படி, 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா பிரத்யேகமாக ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’ என்ற பெயரில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விண்வெளியில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோ தலைவர் நாராயணன் பாளையங்கோட்டையில் உள்ள கடற்படை செயற்கைக்கோள் தகவல் தொடர்பகத்திற்கு நேற்று (டிசம்பர் 11) வருகை தந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: இந்திய விண்வெளி நிலையமானது 2035க்குள் விண்வெளியில் அமைக்கப்படும். இது மொத்தம் 5 மாட்யூல்களைக் (Modules) கொண்டிருக்கும். இதில், முதல் மாட்யூல் 2028ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்.
ககன்யான் திட்டம் என்பது இந்தியாவின் சொந்த ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாகத் திரும்பக் கொண்டு வரும் திட்டமாகும். ராக்கெட் தயாரிப்புப் பணிகள் மற்றும் வீரர்களுக்கான வெப்பம், அழுத்தம், ஆக்சிஜன் ஆகியவற்றைச் சமநிலையில் வைக்கும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டால் வீரர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான ‘குரூ எஸ்கேப் சிஸ்டம்’ வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 8,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக, ஆளில்லாத 3 ராக்கெட்டுகளைச் சோதனை ஓட்டமாக அனுப்ப உள்ளோம். இதைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் நாட்டின் இரண்டாவது ஏவுதளப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கிருந்து ராக்கெட் ஏவப்படும். இது ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் மிக முக்கியமான இரண்டாவது ஏவுதளமாக அமையும். நிலவில் இறங்கி, அங்கிருந்து மண் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவரும் இலக்கு கொண்ட சந்திரயான்-4 திட்டத்திற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த அறிவிப்புகள் மூலம், விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
















