தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தேர்தல் பிரச்சாரங்கள் அதிரடியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று மிக நூதனமான முறையில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. “விடியா ஆட்சிக்கு உங்கள் வீட்டு பில்லே சாட்சி” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்தப் பிரச்சாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
விராலிமலை கடைவீதி, காமராஜர் நகர் மற்றும் ஜல்லிக்கட்டு காளை சிலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தின் போது, அதிமுகவினர் கையில் வைத்திருந்த ‘AIADMK Connect’ செயலியைப் பயன்படுத்தி, அதிநவீன கையடக்க பிரிண்டர்கள் (Handheld Printers) மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பிரத்யேக ஒப்பீட்டுப் பட்டியலை அங்கேயே அச்சிட்டு வழங்கினர். “தண்டனைப் பட்டியல்” (Punishment Bill) என்று பெயரிடப்பட்ட அந்தப் பட்டியலில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்த அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் மின் கட்டண விவரங்கள், தற்போதுள்ள திமுக ஆட்சிக் காலத்தின் விலைகளுடன் ஒப்பிடப்பட்டிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் அந்தந்தக் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச் சுமையைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் காட்டி, இல்லத்தரசிகளிடம் சி.விஜயபாஸ்கர் விளக்கிப் பேசினார்.
ஒவ்வொரு குடும்பமும் இந்த ஆட்சியில் இழந்த தொகையை ரூபாயுடன் கணக்கிட்டு வழங்கிய இந்த நுணுக்கமான பிரச்சாரம், அப்பகுதி மக்களிடையே வியப்பையும் அதேசமயம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. “எங்கள் வீட்டு வரவு செலவைத் துல்லியமாகச் சொல்லிவிட்டார்கள்” என இல்லத்தரசிகள் பலரும் இந்த முயற்சியைப் பாராட்டினர். இந்த நிகழ்வில் முன்னாள் ஆவின் தலைவரும் ஒன்றிய செயலாளருமான பழனியாண்டி, நாகராஜ், மாவட்ட கவுன்சிலர் சிவசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர். விராலிமலையில் சி.விஜயபாஸ்கர் தொடங்கியுள்ள இந்த “தண்டனைப் பட்டியல்” விநியோகம், தமிழகத்தின் மற்ற தொகுதிகளிலும் அதிமுகவினரால் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
