இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் அடைந்துள்ளார். 4வது டெஸ்ட் போட்டியில், காலில் பந்து தாக்கியதில் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் விக்கெட் கீப்பிங் செய்யாமல், காயத்துடன் பேட்டிங் மட்டுமே செய்தார்.
இதையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகினார். மருத்துவ பரிசோதனையில், அவரது காயம் முழுமையாக குணமடைய குறைந்தது ஆறு வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் ஆசிய கோப்பை தொடரிலும், அக்டோபர் 2 முதல் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்க முடியாது. ரிஷப் பண்ட் இடம்பெறாதது, இந்திய அணிக்கு முக்கிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
எனினும், அவரது கால் பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும், ஓய்வு மற்றும் சிகிச்சையுடன் விரைவில் மீள்வார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.