தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவும், இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கவும் தமிழக அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை அசோக் நகரில் நடைபெற்ற விழாவில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் மொத்தம் ரூ.33.85 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 11 ‘முதல்வர் படைப்பகங்கள்’ மற்றும் நவீன நூலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். மேலும், மாநகராட்சி சார்பில் ரூ.10.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் பள்ளிக் கட்டடங்களையும் அவர் அர்ப்பணித்தார்.
சென்னை அசோக் நகரில் ரூ.12.74 கோடி செலவில், சுமார் 7,874 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் மிகப்பிரம்மாண்டமாக இந்தப் படைப்பகம் கட்டப்பட்டுள்ளது. முழுமையாகக் குளிரூட்டப்பட்ட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறைகள், மின்தூக்கி (Lift), 16,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி, பசுமைத் தோட்டம் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் என உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தபடியே காணொலிக் காட்சி வாயிலாக, திரு.வி.க. நகர், ஆர்.கே. நகர், எழும்பூர், பெரம்பூர், ராயபுரம், மயிலாப்பூர் மற்றும் துறைமுகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் ரூ.16.87 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மேலும் 9 முதல்வர் படைப்பகங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். ஓட்டோரி, ஜமாலியா, புளியந்தோப்பு, பட்டாளம், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள இந்த நூலகங்கள் அந்தந்தப் பகுதி மாணவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையவுள்ளது.
கல்வியோடு விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், திரு.வி.க. நகர் மண்டலம் லோகோ ஸ்கீம் பகுதியில் ரூ.2.97 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன ‘முதல்வர் விளையாட்டரங்கம்’ மற்றும் கபிலர் தெருவில் ரூ.7.64 கோடி மதிப்பீட்டில் 17 வகுப்பறைகளுடன் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், ராஜா தெருவில் 2,311 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.34.70 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக் கடையையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, ஆர்.டி.சேகர், ப.தாயகம் கவி, ஜெ.ஜெ.எபிநேசர், இ.பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், நூலக ஆணையக் குழு உறுப்பினர் மனுஷ்ய புத்திரன் மற்றும் காகர்லா உஷா, பி.சந்தரமோகன், கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். நவீன வசதிகளுடன் கூடிய இந்தப் படைப்பகங்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், வாசிப்பு ஆர்வலர்களுக்கும் ஒரு சிறந்த அறிவுத் தளமாக விளங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
